August 17, 2010

கவிஞர் கூத்தரசன்

கவிஞர் கூத்தரசன் வாழ்க்கைக் குறிப்பு

திரு.கூத்தரசன் அவர்கள் தமிழ், தமிழர் என்ற தணியாத உணர்வு கொண்ட தமிழ்க் கவிஞர் ஆவார். தமிழாசிரியர் திரு.சி.கிருட்ணன் - திருமதி.சி.பாக்கியம் (அமிர்தம்) இணையருக்கு 1966 ஆம் ஆண்டு மகனாகப் பிறந்தவர். நடராஜன் என்ற இயற்பெயரைக் கொண்டிருந்தாலும் தமிழ் உணர்வு மேலீட்டால் அதனைக் கூத்தரசன் என்று மொழி மாற்றம் செய்து கொண்டதில் வியப்பு  இல்லை.

ஆரம்பக் கல்வியை பேரா சங்கீத சபா தமிழ்ப் பள்ளியிலும், இடைநிலை உயர்நிலைக் கல்வியை ஈப்போ சுங்கை பாரி இடைநிலைப் பள்ளியிலும், மெதடிஸ்ட் உயர்நிலைப் பள்ளியிலும் மேற்கொண்டார். சென்னை மாணவர் மன்றத்தின் வழி தமிழ் இலக்கியத்தில் புலவர் மணிப் பட்டயமும், அமெரிக்கா டிரினிட்டி பல்கலைக்கழகத்தின் வழி எம்.பி.எ பட்டமும் பெற்றுள்ளார்.

இவருடைய கவிதைகளும் கட்டுரைகளும் கூத்தரசன் என்ற பெயரில் தமிழ் நேசன், மலேசிய நண்பன் நாளிதழ்களில் வெளிவந்துள்ளன. மலேசிய வானொலியிலும் இவரின் கவிதைகள் ஒலித்துள்ளன. தமிழர் திருநாள் மேடைகளிலும் கரத்தரங்கங்களிலும் இவருடைய கவிதைகள் இடம் பெற்றுள்ளன.

தன்முனைப்புச் சொற்பொழிவுகள் நடத்துவதிலும் இவர் அனுபவம் மிக்கவர் என்பது குறிப்பிடத்தக்கது. தான் ஒரு கவிஞனாக வளர்வதற்கு ஆதரவாய் இருந்து யாப்பிலக்கணம் பயிற்றுவித்த தமிழ்க்குயில் கா.கலியபெருமாள், கனிமொழி குப்புசாமி ஆகியோரை இவர் நன்றியோடு நினைவு கூறுகிறார்.

பல்முனை அனுபவம் கொண்ட திரு.கூத்தரசன், பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்க உறுப்பினராகவும், பொன் பாவலர் மன்றத்தின் துணைச் செயலாளராகவும் பொறுப்பு வகிப்பதோடு பல குமுகாய இயக்கங்களிலும் அவ்வப்போது பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வந்துள்ளார்.

1996 ஆம் ஆண்டு திருமதி நா.இராணி (தமிழ்ப்பள்ளி ஆசிரியை) அவர்களோடு பகுத்தறிவுத் திருமணத்தின் மூலம் இல்லறம் பூண்ட திரு.கூத்தரசனுக்கு முகிலரசன், அறிவழகன் எனும் பெயர் கொண்ட இரு மகன்கள் உள்ளனர்.

வணிகத்துறையில் ஈடுபாடு கொண்டோருக்கு கவிதை வடிவிலானத் தன்முனைப்பு நூலையும், தன்னுடைய கவிதைத் தொகுப்பினையும் விரைவில் வெளியிடும் ஆர்வம் கொண்டுள்ள தமிழ் நெஞ்சர் கவிஞர் கூத்தரசனுக்கு பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கம் சிறப்புச் செய்வதில் மிக்க மகிழ்ச்சி அடைவதோடு தனது வாழ்த்துகளையும் கூறிக் கொள்கிறது.