August 17, 2010

ஆசிரியர் திரு.ஜி.மாணிக்கராஜ்

ஆசிரியர் திரு.ஜி.மாணிக்கராஜ் வாழ்க்கைக் குறிப்பு

ஆசிரியர் திரு.ஜி.மாணிக்கராஜ் அவர்கள் ஈப்போ மாநகரில் நன்கு அறிமுகமான  பிரமுகராவார். திரு.மா.ஞானமுத்து, திருமதி.ஜே. பொன்னுத்தாய் இணையரின் பதினொரு பிள்ளைகளில் முதல் மகனாக 14.11.1940 ஆம் ஆண்டு பிறந்த இவர் ஈப்போ தமிழ் செட்டில்மெண்ட் மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளியில் ஆரம்பக் கல்வியையும் 1.4.1960 காலக் கட்டத்தில் பிற்பகலில் ஏ.சி.எஸ் பள்லியில் ஆங்கிலக் கல்வியையும் பயின்று வந்தார்.



அன்பும் பண்பும் நிறைந்த இவர், தமிழ் ஏழாம் வகுப்பிலும், சீனியர் கேம்பிரிட்ஜ் சோதனையிலும் தேர்வு பெற்றார். 1962 ஆம் ஆண்டு தமிழ் ஆசிரியர் போதனாமுறை வகுப்பிலும் தேர்வு பெற்றார். 1960 ஆம் ஆண்டு முதல் 1972 ஆம் ஆண்டு வரை ஈப்போ சுங்கை பாரி அரசினர் தமிழ்ப்பள்ளியில் உதவித் தமிழ் மொழி ஆசிரியராகப் பணியாற்றினார்.

ஆசிரியர் பணியினூடே உள்நாட்டுப் பாதுகாப்புப் படை, செஞ்சிலுவைச் சங்கம், தமிழ் இளைஞர் மணி மன்றம், தமிழர் ஐக்கிய சங்கம் மற்றும் பல்வேறு பொது அமைப்புகளிலும் சேவையாற்றி வந்துள்ளார். 1963ல் ஈப்போவில் தமிழ் இளைஞர் மணிமன்றம் அமைந்த போது அதன் அமைப்புக் குழுவின் உறுப்பினராக இருந்துள்ளார். ம.இ.கா. ஈப்போ பாராட் தொகுதி தாமான் பெர்த்தாமா கிளையின் தலைவராகவும் பொறுப்பேற்றுள்ளார்.

1973 ஆம் ஆண்டு தொடங்கி ஈப்போ, தமிழ் செட்டில்மெண்ட் மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளியின் தலைமை ஆசிரியராக 23 ஆண்டுகள் பணியாற்றினார். அக்காலக்கட்டத்தில் அதே பள்ளியில் அவருக்கு ஆரம்பக் கல்வியைப் புகட்டிய ஆசிரியை திருமதி. செல்வநாயகம் அம்மையார் அவர்களுக்கும் இவர் தலைமை ஆசிரியராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கச் செய்தியாகும்.

ஆசிரியராகப் பணிபுரிந்த காலத்தில் கவிதை, கதை, கட்டுரை எழுதுவதிலும் நாட்டம் காட்டிய இவர் 1969 ஆம் ஆண்டு தமிழ் ஆசிரியை திருமதி. கோ. சந்திரகாந்தம் அவர்களோடு இல்லறம் பூண்டார். இவருக்குப் பிள்ளைச் செல்வங்களாக ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். பணி ஓய்வு பெற்ற நிலையிலும் இன்றும் இவர் தமிழ் ஆசிரியராகவே பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

பல பொது அமைப்புகளுக்கு ஆலோசகராகவும், திருச்சபைகளில் பொது ஊழியராகவும் நற்றொண்டு ஆற்றி வரும் திரு.மாணிக்கராஜ் அவர்களின் சேவையைப் பாராட்டி பேரா மாநில மன்னர் இவருக்கு பி.ஜே.கே விருது வழங்கிச் சிறப்பித்துள்ளார். இத்தகு பெருமைமிக்க நமது சங்க உறுப்பினர் திரு.மாணிக்கராஜ் அவர்களை பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கம் பாராட்டிச் சிறப்புச் செய்வதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறது.


No comments: